இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும்: பிரதமர்
இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும். பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியம் உதயமாகட்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் உதயமாகியுள்ள இலங்கையின் மாபெரும் கலாசாரப் பண்டிகை யான சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசியினை வந்தடை வதுடன் உதயமாகும் புத்தாண்டினை இலங்கையர்களின் வாழ்வில் புதியதொரு பக்கத்தினை ஆரம்பித்து வைக்கும் ஒரு விசேட சந்தர்ப்பமாகக் குறிப்பிடலாம். புதிய அறுவடையின் பின்னர், இந்நாட்டு மக்கள் சுபவேளையில் கலாசார ரீதியான பாரம்பரிய பழக்க, வழக்கங்களின் அடிப்படையில் தமது அன்றாட கருமங்களை ஆரம்பித்து வைப்பதானது எமது ஒற்றுமையினை எடுத்துக் காட்டுகின்றன.
பாக்கியமிக்க இனங்கள் என்ற வகையில் சிங்கள தமிழ் இனத்தவர்கள் உதயமாகும் புதுவருடத்தினை ஒரு களியாட்டமாகக் கருதாது அர்த்தமிக்க ஒரு கலாசாரப் பண்டிகையாக அமைத்துக் கொள்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும்.
உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் எமக்கேயுரிய சம்பிரதாயங்களின் ஊடாக ஒற்றுமையுடன் இந்தத் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டியதுடன், அதற்கான இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து சகல இனத்தவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர் தனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக