அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்
அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்டன் நகரில் இன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரதன் போட்டியைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மரதன் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரதன் போட்டியில் சுமார் 16,000 பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். போய்ல்ஸ்டன் தெருவில் இந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், அங்கு மக்கள் குவிந்திருந்தபோது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 144பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதல் 42 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பொலிஸார் அங்கு நடத்திய சோதனையில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தத் தாக்குதல் குறித்து எப்.பி.ஐ. விசாரணையை ஆரம்பித்துள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை தேடுவதாக எப்.பி.ஐ .அறிவித்துள்ளது.
இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் காலில் காயமடைந்த சவுதி நாட்டுப் பிரஜையொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக